Thursday, May 2, 2013

மனம்திறந்தமடல்



அல்ஜன்னத்(மே)2013 இதழ்
மனம்திறந்தமடல்......

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா பாக்கியங்களையும் வழங்கி, மறுமையில் சொர்க்கம் என்னும்
மகத்தான பேற்றைப் பெறுகின்றவர்களாக ஆக்குவானாக!
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை துவங்கி விட்டது, ஆண்டு முழுவதும் அதிகாலையிலிருந்து
அந்திப்பொழுதுவரை படிப்பு, படிப்பு என பள்ளிப்படிப்புகளிலே நேரத்தை கழித்த மாணவ மாணவியர்
கோடை விடுமுறையில் சிறிது நிம்மதி பெருமுச்சு விடுகின்றனர். அந்த நாட்களை உல்லாச பயணங்களிலும்
உற்றாரை சந்திப்பதிலும் செலவிடுகின்றனர். இப்படியே நமது சமுதாயத்தின் பெரும்பாலான இளைய
தலைமுறையின் இளமைக்காலம் கழிந்து கொண்டிருக்கிறது. பள்ளிக் கூடங்களிலே படிக்கின்ற நமது சமுதாய
மாணவ மாணவியர் தங்கள் மார்க்கத்தைப் பற்றியோ, படைத்த இறைவனைப் பற்றியோ, பரிசுத்த வேதத்தைப்
பற்றியோ, எப்படிப்பட்ட பண்பான வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியோ, எந்தவிதமான
பயிற்சியும் பெறுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளிலே படிக்கின்ற
மாணவர்களுக்கு இஸ்லாம் போதிக்கும் நல்லொழுக்கங்கள் கற்பிக்கப்படுமென்று நினைத்துக் கூட பார்க்க
முடியாது. காரணம் அந்த பள்ளிகளில் அதற்கு இடம் இல்லை, இப்படி உருவாகும் இளைய தலைமுறையின்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சமுதாயம் கவலைப்பட வேண்டும், குறிப்பாக பெற்றோர்
இதில் அக்கறை செலுத்த வேண்டும்.
சமுதாய இளைஞர்களை உண்மையான இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டும் அப்புறப்படுத்தி வேறுவிதமான
சிந்தனைகளை அவர்களுடைய இதயங்களில் ஏற்றுவதற்காக தீய சக்திகள் இடைவிடாது முயற்சித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் பள்ளி மாணவ மாணவியரின் பள்ளி விடுமுறை நாட்களை பயனுள்ளதாக ஆக்க
வேண்டும். அவர்களுடைய இளமையை மார்க்க விரோத சக்திகளுக்கு இறையாக்கிவிடக்கூடாது என்ற
நல்லெண்ணத்தோடு, நமது ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பு தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில் கோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்புக்களை மாணவ சமுதாயத்திற்காக ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மார்க்கத்தைப் பற்றி ஓர்அளவு
தெரிவதற்கான வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகின்ற
இந்த வகுப்புகளை சமுதாய மக்கள் நன்கு பயன்படுத்தி, தங்கள் சந்ததிகளை சிறந்த மார்க்க பற்றுள்ளவர்களாக
மாற்றப்பாடுபடுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

 

No comments:

Post a Comment